உளுந்தூர்பேட்டை, ஜூலை 23- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள நன்னாரம் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் இறந்தவர்களின் சடலங்களை விளைநிலம் வழியாக எடுத்துச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது. இந்த நன்னாவரம் கிராமத்தில் பழைய நன்னாவரம், புதிய நன்னாவரம், மேட்டு நன்னாவரம் என 3 பகுதிகள் உள்ளன. இவற்றில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானத்திற்கு செல்ல, உரிய பாதை இன்றி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை விவசாய விளை நிலங்களில் சடலங்களை தூக்கிச் செல்லும் துயரம் தொடர்கதையாக இருந்து வருகின்றது. மயானத்திற்கு செல்ல உரிய பாதை அமைத்து தரக் கோரி பல்வேறு சமூக நல அமைப்புகள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை உரிய துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் இறந்துபோன ஒருவரின் உடலை விளை நிலங்களின் வழியே தூக்கிச் சென்றனர். இதனால் விளை நிலங்களில் இருந்த பயில் நாசமாகிறது. எனவே இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக மயான பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.