districts

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

விழுப்புரம், டிச. 31- பள்ளி மாணவியை பாலியர் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் தாலுகா புதுக்குப்பம் பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (39). இவர் அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அதே செங்கல் சூளையில் திண்டிவனத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். அவர்களது 12 வயது மகள் அந்த செங்கல் சூளையில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 26.10.2020 அன்று அந்த மாணவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையறிந்த பிரகாஷ், அந்த மாணவியின் பெற்றோரிடம் சென்று நான் புதுச்சேரி மாநிலம் திருக்கனூரில் உள்ள மருத்துவமனைக்கு எனது மனைவியை அழைத்துச்செல்ல இருப்பதால் உங்கள் மகளையும் உடன் அழைத்துச்சென்று விட்டு வருவதாக கூறினார். இதை நம்பிய அவர்கள், தங்கள் மகளை பிரகாசுடன் அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் அந்த மாணவியை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சம் அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து பிரகாஷ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.