districts

img

வயதானவர்கள் இயற்கை மரணத்திற்கு மருத்துவ சான்றிதழ் கேட்க கூடாது தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் ஜி.விஜயலட்சுமி வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 28 - வயதானவர்கள் இயற்கை மரணமடைந்தால் மயானத்தில் மருத்துவ சான்றிதழ் கேட்பதை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி வலியுறுத்தி உள்ளார். தாம்பரம் மாநகராட்சி கூட்டம் திங்களன்று (மார்ச் 27) மேயர் வசந்த குமாரி கமலகண்ணன் தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி மாநகராட்சியின் வருவாய் 702 கோடி ரூபாயாகவும், செலவு 671 கோடி ரூபாயாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய சிபிஎம் 28வது வார்டு ஜி.விஜயலட்சுமி, முதுமையால் இயற்கை மரணம் அடைந்த வர்களுக்கு அரசு மருத்துவமனை மருத்து வர்கள் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். தனியார் மருத்துவர்கள் அதிக கட்டணம் கேட்கின்றனர். இத்தகைய மரணங்களுக்கு சான்றிதழ் தேவையில்லை என்று மருத்துவத்துறை இயக்குநர் 2018ம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு செய்து கொடுக்கும் சான்றிதழ் போதுமானது என்றார். மாநகராட்சி தூய்மை பணி யாளர்களுக்கு அடையாள அட்டை கூட வழங்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள படி தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 11 ஆயிரத்து 76 ரூபாய் வழங்க வேண்டும்இதனை ஒப்பந்ததாரர்கள் வழங்குவ தில்லை. பேரூராட்சிகளில் பெற்று வந்த ஊதியத்தை ஒப்பந்ததாரர்கள் கணிசமாக குறைத்து அதிகபட்சமாக 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர். ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதிக்கு 12 விழுக்காடு, இஎஸ்ஐ-க்கு 3.25 விழுக்காடு மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும். மாறாக, பிஎப்-க்கு 2500 ரூபாய், இஎஸ்ஐ-க்கு 800 ரூபாய் பிடித்தம் செய்வது சட்டவிரோதம். ஆட்சியர் நிர்ண யித்துள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றப்பட்ட தொகையை கணக்கிட்டு பாக்கித் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த மேயர், முதியோர் இயற்கை மரண சான்று தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கவும், குறைகளை சரி செய்யவும் ஒப்பந்ததாரர்களை அழைத்து அறிவுறுத்தப்படும் என்றார்.