districts

img

குடிமனைப் பட்டா வழங்காத அதிகாரிகள்: நரிக்குறவர்கள் ஆவேசம்

விழுப்புரம், பிப். 6- இலவசமனைப் பட்டா, சாதி சான்று வழங்காத அதிகாரிகளை கண்டித்து நரிக்குறவர் சமுதாயத்தினர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைகளை வீசி தர்ணாவில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட 2ஆவது எம்.ஜி.ஆர் நகரில் நரிக்குறவர் சமுகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பங்களாக வசிக்கின்றனர்.  இலவச வீட்டுமனைப் பட்டா, சாதி சான்று கேட்டும் வழங்கப்படவில்லை. மேலும், மின்சார வசதியும் செய்து தரவில்லை.  இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், பட்டா சாதிச் சான்றிதழ் மற்றும் அடிப்படை வசதிகளை நிறை வேற்றக் கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணி யில் இருந்த காவல் துறையினர் இது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.