சென்னை,அக்.20- சென்னை சென்ட்ரலில் பொதுமக்கள் வசதிக்காக திரையரங்களுடன் 15 மாடியில் வணிகவளாகம் அமைகிறது. சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் ‘சென்ட்ரல் சதுக்கம்’ அமைக்கப்பட்டது. இதில் நடைபாதை, ஓய்வு இருக்கைகள், சுரங்க நடைபாதைகள், புல்வெளிகள் ஆகிய பல்வேறு வசதிகளை பயணிகள் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். சென்ட்ரல் சதுக்கம் திட்டத்தின் மேலும் ஒரு பகுதியாக 2 பிரிவுகளுடன் கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.400 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. பிரமாண்ட 2 டவர் கட்டிடங் கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதில் 3 அடித்தளம், ஒரு தரை தளம், 15 மாடிகளுடன் டவர் கட்டிடம் அமைக்கப்படுகின்றன. 600 கார்கள், 1,600 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் தரைத் தளத்தில் பிரமாண்ட வாகன நிறுத்தம் வசதி அமைக்கப்பட உள்ளது” என்றார். 7 மாடிகளுடன் இன்னொரு டவர் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதில் ஷாப்பிங்மால், தியேட்டர்கள், விளையாட்டு திடல்கள், வணிக நிறுவன அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் பல சிறப்பு அம்ச வசதிகளுடன் அமைக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.