சென்னை, மார்ச் 31- ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைப்பிரிவில், வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரைச் சேர்ந்தவர் பிரவீன் (21). இவர் மார்ச் 20ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து மூல கொத்தளத்திற்கு பைக் ரேஸ் சென்றுள்ளார். இதையொட்டி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிரவீன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீன் கோரி பிரவீன் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்புக் கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் தொனியில் செயல்படுவதாகவும் வேதனை தெரிவித்தார். பின்னர் மனுதாரர் பிரவீன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் ஒரு மாத காலம் வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற வேண்டும் எனவும், அதுகுறித்து மருத்துவமனை டீனுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்த நீதிபதி, பிரவீனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.