districts

img

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

ஆலந்தூர்,ஜன.12- பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் சொந்த ஊருக்கு விமான பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர்.  பயண கட்டணம் அதிகம் என்றாலும், குறைந்த நேர பயணம் என்பதால் விமான பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர். இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய ஊருக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை சோதனை செய்து அனுப்ப வேண்டும்.  மத்திய தொழிற் படை பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், குடியுரிமை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் என பல சோதனை முடிந்த பின்பு தான் உள்ளே செல்ல முடியும். இன்று ஒரே நாளில் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாவுக்கும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சோதனைகளை முடித்து உள்ளே சென்றனர். இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டு நிலையத்தின் நுழைவாயில்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சென்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணமும் பல மடங்கு உயர்ந்து உள்ளது. சென்னை-மதுரைக்கு இன்று விமான கட்டணம் ரூ.12ஆயிரத்து 500, தூத்துக்குடிக்கு.10 ஆயிரம், திருச்சிக்கு ரூ.11ஆயிரத்து 500, கோவைக்கு ரூ.11 ஆயிரத்து 500 ஆக உள்ளது.