அரியலூர், மே 1 - மே 3 அன்று இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ரமலான் முதல் நாளில் இரவு பிறை தெரிந்தவுடன் வழிபட்டு, ஆடுவெட்டி கொண்டாடுவது இஸ்லாமியர்களின் வழக்கம். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் வழக்கத்தை விட குறைவாகவே ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் ஆண்டிமடம், காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரத்திற்காக வியாபாரிகள் ஆடுகளை வாகனங்களில் கொண்டு வந்தனர். அதிகாலை முதலே சந்தையில் ஆடுகள் விற்பனை துவங்கியது. இதில் வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மட்டுமே வந்திருந்தனர். ரமலான் பண்டிகைக்கு குறுக்குரோடு வாரச் சந்தையில், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகும். ஆனால் இந்த ஆண்டு வியாபாரிகள் வராததால் ரூ.30 லட்சத்துக்கு மட்டுமே ஆடுகள் விற்பனையாகின. கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த ஆண்டு ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வாரச்சந்தையில் ஆடுகளின் உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை நடக்காததால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.