செங்கல்பட்டு, மார்ச் 27 - செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தலைமை செயலாளர் இறையன்புவிடம் தாய்மார்கள் சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை பண்ணை, செங்கல்பட்டு நகர பகுதியில் உள்ள ஜேசிகே நகர் பூங்கா, புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சித்த யோகா மையம், அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளை ஞாயிறன்று (மார்ச் 27) தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் ஆய்வு மேற்கொண்ட அவரிடம், கழிவறை, படுக்கை உள்ளிட்ட எந்த வசதியும் இங்கு இல்லை. கொசுத் தொல்லை காரணமாக குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் கடுமையான உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எத்தனை முறை புகார் அளித்தாலும் அதன்மீது நடவடிக்கை இல்லை. என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று கர்ப்பிணிகளும், தாய்மார்களும் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.