விருதுநகர்,அக்.1- தமிழக இளைஞர் நலன் -விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விருதுநகரில் விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் 1 அன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி உரையாற்றினார்.
அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்க முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு மட்டும் ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உலக அளவில் சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையில், முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். அதற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் விரைவில் வழங்க உள்ளார் என்று தெரிவித்தார்.
இதில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.