தேனி, ஜூன் 5- ஆண்டிபட்டியில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருது மற்றும் தலா ரூ.1 இலட்சத்திற்கான பரிசுத்தொகை யினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகப் பணியாற்றிய கம்பத்தைச் சார்ந்த, ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மற்றும் உத்தமபாளையத்தைச் சார்ந்த செந்தில் குமார் ஆகியோருக்கு வழங்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் திறமையாக, அர்ப்பணிப்புடன் சிறப்பாகப் பணியாற்றும் 100 நபர்களுக்கு ஆண்டுதோறும் ‘பசுமை முதன்மையாளர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டு தேனி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட கம்பத்தைச் சார்ந்த, ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மற்றும் உத்தமபாளையத்தைச் சார்ந்த து.செந்தில் குமார் ஆகிய இருவருக்கும் தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருதுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, தனியார் மில் நிறுவனத்தில் பணிபுரிகின்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மஞ்சப்பைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (மு.கூ.பொ) ஜி.ராமராஜ், உதவி பொறியாளர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.