சிவகங்கை, ஏப்.19- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஏப்ரல் 25 முதல் சித்திரை திருவிழா தொடங்குவதை முன்னிட்டு வைகை ஆற்றை சுத்தம் செய்கிற பணியை மானா மதுரை நகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருவதாக நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தெரிவித்தார். சிவகங்கை சமஸ்தானம் பரம்பரை அறங்காவலர் டி .எஸ். கே. மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஸ்ரீ ஆனந்த வள்ளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 25 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானிகம் தெய்வ சிகாமணி பட்டர், தேவஸ்தான மேலா ளர் இளங்கோ ஆகியோர் பங்கேற்போடு திருவிழா தொடங்க உள்ளது. விழா ஏற்பாட்டுக்கு உதவியாக பாரதிஅச்சக தேவதாஸ்,பாரதி ஸ்டூடியோ, ஸ்ரீசித்திவிநாயகர் பாத்திர ஸ்டோர் ஆகியோர் சார்பில் கோயில் அழைப்பிதழ் அச்ச டிப்பு செய்யப்பட்டது. மானாமதுரை நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி தலைமையில் நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம் முன்னிலை யில் சித்திரத்திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றை சுத்தம் செய்கிற பணி நடக்கிறது. மேலும் ராட்டினம், சர்க்கஸ் நிறுவ பணியை தொடங்கி உள்ளனர்.