districts

மூடிய கழட்டிட்டு பாருங்க டாக்டர்!

‘‘மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இங்கு செய்துள்ள பணிகளைப் பார்க்க பைனாகுலர் கொண்டு வந்துள்ளேன். பத்திரிகையாளர்கள் தெரிகிறீர்கள்; அருகிலுள்ள பாலம் தெரிகிறது; ஆனால் அவர் செய்த எதுவுமே என் கண்களுக்கு தெரியவில்லை’’. - இப்படி காமெடி செய்தார் மதுரை அதிமுக வேட்பாளர் பி.சரவணன். ஒரு வேளை பைனாகுலரில் ஒரிஜினல் லென்ஸ் இருந்திருந்தால், அவர் அடுத்து தாவப்போகும் கட்சியின் கொடி நிச்சயம் அவருக்கே தெரிந்திருக்கும்.  “டாக்டர், நீங்க பைனாகுலரின் மூடியையே திறக்கவில்லை” என்று ஒரு காட்சி ஊடகமும் அம்பலப்படுத்தியுள்ளது. நீங்கள் ஒரு மருத்துவர் தானே... மதுரை தோப்பூரில் உள்ள நுரையீரல் சிறப்பு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசுத்துறை செயலாளருக்கு 2021-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி சு.வெங்கடேசன் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் வசதி வழங்க அரசு உத்தரவிட்டது தெரியுமா? மதுரை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மேலூரில் மூன்று தளங்களில் 60 படுக்கைகள் கொண்ட விபத்து மற்றும் உயிர்காக்கும் சிகிச்சை பிரிவு மருத்துவமனை அமைக்க ரூ.9.23 கோடி மதிப்பீட்டிலும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்காக ஐந்து மாடியில் 100 படுக்கைகளுடன் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.20 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் நடைபெறுவது உங்களுக்குத் தெரியுமா? 2019-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை பிரதம மந்திரியின் தேசிய மருத்துவ நிவாரண நிதியிலிருந்து 160  நபர்களுக்கு ரூ.4 கோடி பெற்றுத்தரப்பட்டுள்ளது. இதெல்லாம் அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.   அது மட்டுமா? மதுரை மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகளைக் கேளுங்கள் சு.வெங்கடேசன் எத்தனை குடும்பங்களில் ஒளியேற்றி வைத்திருக்கிறார் என்பதைச் சொல்வார்கள்! காமாலைக்காரருக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள். அரண்டவர் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரியுமென்பார்கள். அதுபோல் இருந்தது அவரது பேச்சு.                   (நமது நிருபர்)