districts

மதுரை முக்கிய செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி 

ஹரியானா - மணிப்பூரில் பாஜக. ஆர்.எஸ்.எஸ்  அமைப்புகளின் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து  சிபிஎம் ஆர்ப்பாட்டம். இடம்: முருகன் கோவில் அருகே,  உசிலம்பட்டி. மதுரை. ஆகஸ்ட் 9 மாலை 5மணி.பங்கேற்போர்: கே.சாமுவேல்ராஜ், கே.ராஜேந்திரன், செ.முத்துராணி,பெ.ராமர்.

சுருளி அருவியில் குளிக்க அனுமதி

தேனி, ஆக.8- சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க செவ்  வாய்க்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாக சுருளி அருவி பகுதியில் யானை களின் நடமாட்டம் இருந்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். வனத்துறையினர் கடுமையாக முயற்சி  செய்து யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்த னர். அதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை யினர் அனுமதி வழங்கினர் .சுற்றுலா பயணிகள், பக்தர்கள்  சுருளி அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.

ஆத்திரமூட்டும் ஆடியோ பதிவு  பார்வர்டு பிளாக் நிர்வாகி கைது 

தேனி, ஆக.8- ஆத்திரமூட்டும் வகையில் ஆடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய அகில இந்திய பார்வர்டு  பிளாக் நிர்வாகி கைது செய்யப்பட்டார் .மேலும் இது போன்ற தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார் . இது அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அகில  இந்திய பார்வர்டு பிளாக் கம்பம் நகர செயலாளராக இருப்பவர் அறிவழகன் (42).இவர் கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை தடுத்து உடைக்கப் போவதாக ஆத்தி ரமூட்டும் வகையில்,பொது அமைதிக்கு பங்கம் விளை விக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்டார் .இது பரவி தமிழக ,கேரள மாநிலங்களின் எல்லையில் ஒரு வித அசாதாரண சூழல் நிலவியது .சமூக  வலைத்தளங்களில் ஆடியோ வெளியிட்ட அறிவழகன் மீது  கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து  கைது செய்யப்பட்டார் .இது தொடர்பாக அசம்பாவிதம் ஏற்  படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் இது போன்ற சட்டம், ஒழுங்கை சீர்கெடுக்கும்  வகையில் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக் களை பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே எச்சரித்துள்ளார்.

போடியில் கஞ்சா விற்றவர் கைது

தேனி, ஆக.8- போடியில் கஞ்சா விற்பனை செய்த மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்ற னர். தேனி மாவட்டம், போடி கீழத்தெரு பகுதியில் கஞ்சா  விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது மூதாட்டி ஒருவர் சட்டவிரோதமாக கஞ்சா  பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. விசாரணையில் மூதாட்டி பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முரு கேசன் மனைவி சரஸ்வதி (67) என்பது தெரியவந்தது.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரஸ்வ தியை கைது செய்து அவரிடமிருந்து 1300 கிராம் கஞ்சா வை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னாள் இராணுவ வீரர் தற்கொலை 

தேனி, ஆக.8- ஆண்டிபட்டி அருகே முன்னாள் ராணுவ வீரர் தற்  கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சேடப்பட்டி அருகே, குப்பல் நத்தம் பகுதியை சேர்ந்த வர் மொக்கையன்(69). முன்னாள் ராணுவ வீரர். இவர்  தற்போது சொந்த ஊரான ஆண்டிபட்டி அருகே டி.சொக்க லிங்காபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தனியாக வசித்து  வந்தார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த தாக தெரிகிறது. மொக்கையன் வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக திங்களன்று பாலக்கோம்பை அருகே உள்ள நாகலாறு ஓடையில்‌ விஷ மருந்து குடித்து இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற ராஜதானி போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முறைகேடு புகாரில் தேவாரம் பேரூராட்சி செயல் அலுவலர் இடைநீக்கம்

தேனி, ஆக.8- தேனி மாவட்டம், தேவாரம் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வருபவர் குலோத்துங்கன். இவர் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியையும் கூடுத லாக கவனித்து வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு  வரை சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேரூராட்சி செயல்  அலுவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது முறை கேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் விசா ரணை நடைபெற்று வந்தது .இந்நிலையில் கடந்த  2022 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இவர் மீதான புகார்களில் முறைகேடு கள் நடந்தது உறுதியானது. இதனையடுத்து பேரூ ராட்சிகள் இயக்குனர் கிரண்குராலா, செயல்அலுவலர் குலோத்து ங்கனை பணியிடைநீக்கம் செய்து உத்தர விட்டார். உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலு வலர் சின்னச்சாமி பாண்டியன் தேவாரம் பேரூராட்சி யை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே விபத்தில் விவசாயி பலி

தேனி, ஆக.8- ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாக னங்கள் மோதிய விபத்தில் விவசாயி உயிரி ழந்தார்.  தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(48). இவர் திங்களன்று  மாலை இருசக்கர வாகனத்தில் அவரது தோட்டத்திற்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தபோது, தேனி - மதுரை சாலையை கடந்துள்ளார். அப்போது இரு  சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதி யதில் வேல்முருகன் தூக்கி வீசப்பட்டு தலை யில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.  இந்த இருசக்கர வாகனத்தில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த  ரவிச்சந்திரன் மகன் சஞ்சய்(25), ரகு மகன்  சேவாக்(24) ஆகிய இருவரும் வந்தனர். இந்த விபத்தில் சஞ்சய், சேவாக் என்ற  இரண்டு இளைஞர்களும் பலத்த காயங்க ளுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல்நிலை யத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றனர். தேனி அருகே தொழிலாளி பலி தேனி அருகில் உள்ள பூதிப்புரம் சுப்பிர மணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகன்(36). இவர் நகைபட்டறையில் வேலை பார்த்து வந்தார். தினமும் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி தேனி-பூதிப்புரம் ரோட்டில் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பைக்கில் இருந்து தவறிவிழுந்து படுகாயமடைந்தார். மதுரை  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை  வைகை, பெரியாறு அணை நீர்மட்டம் குறைவால் விவசாயிகள் கவலை

தேனி, ஆக.8- நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத நிலையில் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை, பெரியாறு அணைகளின் நீர் மட்டம் சரிந்து வருகிறது. வைகை அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதி களான வருசநாடு, வெள்ளிமலை, மூல வைகை ஆறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்  யும் மழை காரணமாகவும், பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் நீர்வரத்து இருக் கும். கடந்த சில மாதங்களாக வைகை அணை, பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத கார ணத்தினால் அணைக்கு நீர்வரத்து குறைந்  தது. வைகை அணையில் கடந்த சில நாட்க ளாக நீர்வரத்து இல்லை. கடந்த கோடை  காலத்தில் வெயில் அதிகரித்து காணப்பட்  டது. இதனால் பெரியாறு, வைகை அணை யில் இருந்து நீர் ஆவியாகி குறைய தொடங்கியது. இதனால் அணைகளுக்கு நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.  ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்  தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோ பர் அல்லது நவம்பர் மாதத்தில் இரண்டாம்  போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது  வழக்கம். இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல்  அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.05 அடி யாக உள்ளது. அணைக்கு 61 கன அடி நீர்  வருகிறது. 400 கனஅடி நீர் திறக்கப்படு கிறது. இருப்பு 2836 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 48.31 அடியாக உள்ளது. அணைக்கு நீர்  வரத்து இல்லை. இருப்பு 1786 மி.கன அடி யாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 302.98 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.32 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. திறப்பு 3 கனஅடியாக உள்ளது. இருப்பு 32 மி.கன அடியாக உள்ளது.

ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி 

மதுரை, ஆக.8-  மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறு முகம்.இவர் கே.கே.நகர் சுந்தரம் பார்க் அருகே தனது  ஷேர் ஆட்டோவில் மனைவி  மீனாவுடன் சென்று கொண்டி ருந்தார்.  அந்தப் பகுதியில் ஒரு புறம் சாலை போடும் பணி நடைபெறுகிறது.இதனால்  ஒரே வழியில் எதிர் எதிர் திசைகளில் வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது சுகப்பிரியா மருத்துவமனை அருகே சென்ற போது குறுக்கே வந்த வர் மீது மோதாமல் இருக்க ஆறுமுகம் ஆட்டோவை திருப்பினார். அப்போது டூவீலர் மீது மோதி ஆட்டோ  கவிழ்ந்தது. இதில் ஆறு முகம் மனைவி மீனா மீது  ஆட்டோ கவிழ்ந்து சம்பவம்  நடந்த இடத்திலே உயிரி ழந்தார். இது சம்பந்தமாக போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மீனா மகன்  சுப்பிரமணி கொடுத்த புகா ரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சின்னாளபட்டியில்  தெரு நாய்கள் அட்டூழியம்

சின்னாளப்பட்டி, ஆக.8- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேரூராட்சி யில் தெரு நாய்கள் அதிகரித்  துள்ளது. இந்த நாய்கள் சாலை மற்றும் தெருக்களில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் போவோ ரை விரட்டி விரட்டி கடித் துள்ளன.  நேற்று சின்னாளப்பட்டி பேருந்து நிலையம் எதிரே  உள்ள தெருவில் 7-க்கும் மேற்பட்டோரை நாய் கடித்  துள்ளது. இதில் ரத்த காய மடைந்த கிருஷ்ணன்(43), குமாரி(50), முத்தம்மாள் (65),உட்பட ஏழு பேர் சின்  னாளப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை  அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இது குறித்து உடனடியாக பேரூராட்சி தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா ஆகியோர் வந்த னர். பணியாளர்கள் தெரு நாய்களைப் பிடிக்கும் பணி யில் ஈடுபட்டனர்.

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில்  தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரப்படுத்துக!

மதுரை, ஆக.8- மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் கள்ளர் சீர மைப்புப் பள்ளிகளில் உள்ள உயர்நிலை/  மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களை பணிநிரந்த ரப்படுத்திட வழங்கப்பட்ட நீதிமன்ற உத்த ரவை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு கள்ளர் சீரமைப்புத்துறை அனைத்து ஊழி யர் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பழைய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் இயங்கி வரும் கள்ளர்  சீரமைப்புத்துறை இணை இயக்குநர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்க தலைவர் வெ.கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் மா.சுந்தர லிங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். அரசு ஊழியர் சங்க மாவட்டச்செய லாளர் க.நீதிராஜா நிறைவுரையாற்றினார், தோழமை சங்க நிர்வாகிகள் பெ.சீனிவாச கன், இரா.தமிழ், கூ.முத்துவேல் ஆகியோர்  ஆதரித்துப் பேசினர்.

பாஜக அலுவலகத்தில் அனுமதியின்றி  வைத்த சிலையை போலீசார் அகற்றினர்

விருதுநகர், ஆக.8- விருதுநகர்-சாத்தூர் 4 வழிச் சாலை அருகே பாஜக மாவட்ட அலுவல கம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் பாரத மாதா சிலை ஒன்றை அக்கட்சியினர் திடீரென வைத்துக் கொண்டிருந்தனர். இந்தத் தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. விரைந்து வந்த போலீசார், அனுமதியின்றி எந்தச் சிலையையும் வைக்கக் கூடாது. எனவே, அதை உடனே அகற்ற வேண்டுமென பாஜக வினரிடம் அறிவுறுத்தினர். ஆனால், பாஜகவினர் அகற்ற மாட்டோம் என  கூச்சலிட்டனர். பின்பு, அங்கிருந்த சென்ற போலீசார், நள்ளிரவு நேரத்தில்  மீண்டும் அங்கு வந்து அந்த சிலையை அகற்றி மூட்டையில் கட்டி எடுத்துச்  சென்றனர்.