பொள்ளாச்சி, ஏப்.27- பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கோழிகமுத்தி முகாமில் 71 வயது மதிக்கத்தக்க வளர்ப்பு யானை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது. கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட உலாந்தி வனச்சரக்கத்தின் எல்லைக்குட்பட்ட கோழிகமுத்தி முகாமில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயலட்சுமி (71) என்ற பெண் யானை, கடந்த ஏப்.7 ஆம் தேதி முதல் சாணமிடாமலும், உணவு உட்கொள்ளாமலும் சோர்வுடன் இருந்து வந்தது. இதனால், இந்த யானை சிறப்பு வல்லுநர் குழுவால் கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும், வன கால்நடை மருத்துவரால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புதனன்று மதியம் 2.15 மணியளவில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது. இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை துணை இயக்குனர் அறிவுறுத்தலின்படி உடற்கூராய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.