districts

ஜனநாயக உரிமைகளை மறுக்கும் காவல்துறை குமரி மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் புகார்

நாகர்கோவில், ஆக.30- கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் துறையால் மறுக்கப்படும் ஜனநாயக உரிமைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.உசேன், என்.எஸ்.கண்ணன் ஆகியோர் ஆக.30 வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனாவை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.  அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாவட்டத்தின் மிக முக்கியமான ஜனநாயக உரிமைகள் தொடர்பான இப்பிரச்சனையை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். சமீப காலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஜனநாயக முறையில், மக்கள் பிரச்சனைகள் மீதான இயக்கங்கள் நடத்துவதற்கான அனுமதிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற இயக்கங்களுக்கு அனுமதி கோரி காவல் நிலையங்களை அணுகினால் உடனே அனுமதி மறுக்கப்படுகிறது. தேர்தல் கால விதிமுறைகள்  தொடர்ந்து கடைபிடிக்கப்படுகின்றன. கொடிக்கம்பங்கள் நடுவது, கொடி, தோரணங்கள் கட்டுவதற்கெல்லாம்கூட மறுப்பு சொல்லப்படுகிறது. பொதுவாக இடதுசாரி அமைப்புகள் மட்டுமே, மக்கள் பிரச்சனைகள், தொழிலாளர் பிரச்சனைகளுக்கு  தீர்வு காண வேண்டி பொது வெளிகளில் குரல் எழுப்புகின்றன. அவற்றை மறுப்பதன் மூலம் பொதுமக்களின் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னால் எந்த இயக்கம் நடத்தினாலும், தடுப்பது, ஒலிபெருக்கியை பறிப்பது என தேவையற்ற சச்சரவுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.  இதுகுறித்து மாவட்டத்தின் அனைத்து கட்சி செயலாளர்கள், அனைத்து மக்கள் பிரதிநிதிகள் சார்பில் அன்றைய காவல் கண்காணிப்பாளரை  சந்தித்து வலியுறுத்தியதன் பேரில், இதுபோன்ற தேர்தல் கால கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும், ஆட்சியர் அலுவலகம் முன் ஒலிபெருக்கி வைப்பதற்கும் இடையூறுகள் இருக்காது என உறுதி யளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த உறுதி நடைமுறைப்படுத்தப் படவில்லை. கொரோனா காலத்தில் விதிமுறைகளை கடைபிடித்து நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களின் போது போடப்பட்ட அரசியல் வழக்குகளும், திராவிட முன்னேற்ற கழக ம்  ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போது அறிவித்த அரசியல் சார்ந்த வழக்குகள் திரும்பப் பெறும் என்ற அறிவிப்பும் பல காவல்நிலையங்களில் அமல்படுத்தப்படவில்லை. எனவே இதுபோன்ற ஜனநாயக விரோத, அரசியல் சாசன விதிகளுக்கு முரணான செயல்களை மாவட்டத்தின் காவல் நிலையங்கள் தொடர்ந்து கடைபிடிக்காதபடி  உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.   இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.