districts

img

ஊராட்சி தலைவரிடம் 100 நாள் வேலை தொழிலாளர்கள் மனு

திருவில்லிபுத்தூர், பிப்.25-  வத்திராயிருப்பு ஒன்றியம் ராமசாமியாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் 6 மணிக்கு வேலைக்கு வரச் சொல்லி அலுவலர்கள் கட்டாயப் படுத்துகின்றனர்.  இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் விசாரித்தபோது, ஒன்றிய அரசு உத்தரவில் தொழிலாளர்களை வேலைக்கு வந்ததற்கு அடையாளமாக படம் எடுத்து அரசு செயலியில் பதிவிட வேண்டும். அப்போதுதான் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என்ற உத்தரவு உள்ளது.  தொழிலாளர்கள் வருகையை பதிவு செய்யும் செயலி காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, காலை 7 மணிக்கு மேல் வேலை செய்யாது. இதனால் காலை 6 மணிக்கு அனைவரையும் வரச்சொல்லி அவர்களை படம் எடுக்க பயன்படுத்துகிறார்கள்.  இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி தொழிலாளர்களை சந்தித்து பேசினர். பின்னர் அவர்களுடன் ராமசாமியாபுரம் ஊராட்சி தலைவரை சந்தித்து வழக்கம்போல் காலை 9 மணிக்கு தொழிலாளர்கள் பணிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும். காலை 6 மணி என்பதை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.  மனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் கிரேஸ் உரிய அதிகாரியிடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நிகழ்வில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் பெனரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.