புதுச்சேரி,அக்.2- புதுச்சேரி அரசு உள்ளாட்சித்துறை - நகராட்சிகளின் சார்பில் ஸ்வச்தா ஹி சேவா (தூய்மையே சேவை) இருவாரப்பணி நிறைவு விழா அக்டோபர் 2 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று மாணவ - மாணவியர் ஓட்டம், தூய்மைப்பணியை தொடங்கி வைத்தனர்.
இதில் முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், இந்தத் திட்ட பெயர் ஸ்வச்தா ஹி சேவா என இந்தியில் உள்ளது. திட்டங்களின் பெயர் தமிழில் எல்லோருக்கும் புரியும்படி இருக்க வேண்டும். ஆனால், திட்டங்களின் பெயர்கள் தமிழில் இல்லை. ஒன்றிய அரசு திட்டங்களின் பெயர்கள் இந்தியில் இருப்பதால் எனக்கும், மக்களுக்கும் தெரியவில்லை .உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் வேண்டு கோள் வைக்கிறேன். திட்டங்களின் பெயர்களை தமிழில் தர வேண்டும். இது எப்போது மாறிப்போனது என்று தெரியவில்லை. திட்டத்தைப் பற்றி நானே தேடுகிறேன். நானே தேடினால் மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது. கொடி அசைத்து தொடங்கி வைக்கும்போது, குழந்தைகள் இதுதொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை எடுத்துச் சென்றனர். அதில் இருக்கும் வாசகங்களில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இதைக்கூட தமிழில் தராவிட்டால் என்ன செய்வது? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.