புதுச்சேரி, ஜூலை 4- பணியின் போது உயிரிழந்த நகராட்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என்று புதுச்சேரி அரசை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரி நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிகாலங்களில் இறந்த ஊழியர்களின், வாரிசுதாரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் வேலை வழங்க வேண்டும். அண்மையில் அரசு சாரா நிறு வனங்களான அமுதசுரபி, பாட்கோ நிறு வனங்களில் பணியாற்றி உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு முதல்வர் பணி ஆணை வழங்கியதைப் போல் நகராட்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கும் பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்தகணபதி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன், பொருளாளர் கிருஸ்டோபர், நகராட்சி ஊழியர் சங்க நிர்வாகி கலியபெருமாள்,செய்தி தொடர்பாளர் நமச்சிவாயம்,வாரிசுதாரர்கள் சங்கத்தின் தலைவர் சத்யா,செயலாளர் பிரபு, கலை வாணி,கவிதா உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.