புதுக்கோட்டை, ஜூலை 27 - புதுக்கோட்டை புத்தகத் திருவிழா எழுச்சியுடன் தொடங்கியது. அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றினர்.
7 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா, புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை எழுச்சியுடன் தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குளைக் கொண்ட புத்தக் கண்காட்சியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்து, கண்காட்சியை பார்வையிட்டு உரையாற்றினர்.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சின்னதுரை (கந்தர்வகோட்டை), டாக்டர் வை.முத்துராஜா (புதுக்கோட்டை) ஆகியோர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாலையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பேக்கரி மஹராஜ் உரிமையாளர் அருண் சின்னப்பா தலைமை வகித்தார்.
இளைய மன்னர் ஆர்.விஜயகுமார் தொடக்கவுரையாற்றினார். திரைப்பட இயக்குநர்-நடிகர் போஸ் வெங்கட் சிறப்புரையாற்றினார். பள்ளி, மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக ஒருங்கிணைப்பாளர் அ.மணவாளன் வரவேற்க, அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் ஈ.பவுனம்மாள் நன்றி கூறினார்.
புத்தகம் வாசித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்
மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், “இணைய தளத்தில் தேடினால் எல்லாமும் கிடைக்கிற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், புத்தகங்களை வாசித்தால் மட்டுமே நினைவாற்றல் அதிகரிக்கும். ஒவ்வொருவரும் அதிக புத்தகங்களை வாங்கி வீடுகளில் நூலகத்தை உருவாக்க வேண்டும். அப்போது சிறைச்சாலை தேவையிருக்காது. இளைஞர்கள் வாசிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது” என்றார்.