districts

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அறந்தாங்கி நகர்மன்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாக கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை பிரச்சாரம்

அறந்தாங்கி, பிப்.15 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.  பிரச்சாரத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். கட்சியின் 24 ஆவது வார்டு வேட்பாளர் சம்சாத்பேகத்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திலும், 22 ஆவது வார்டு திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்திலும், 23 ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் அசாருதீனுக்கு கை சின்னத்திலும், 18 ஆவது வார்டு திமுக வேட்பாளர் விசாலாட்சிக்கு உதயசூரியன் சின்னத்திலும், 3 ஆவது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஸ்ரீவித்யாவிற்கு உதயசூரியன் சின்னத்திலும்,  4 ஆவது வார்டு மதிமுக வேட்பாளர் மகேஸ்வரி அழகுவிற்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்குச் சேகரித்தனர். பிரச்சாரத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பேசுகையில், “உள்ளாட்சி அமைப்பு பணிகள் சாதாரண குடிமக்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி, வடிகால்வசதி தெருவிளக்கு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் பென்சன் போன்ற அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய வார்டு உறுப்பினர் பதவியைகூட பணம், பரிசு பொருட்கள் கொடுத்து வாக்குகளை விலைக்கு பெற்று விடுகின்றனர். அரசியல் களம் சூடுபிடிக்கிறது என பத்திரிக்கைகள் எழுதுகின்றன. தேர்தல் முடிந்த பிறகு ஒரு வசதியும் செய்து தரப்படாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் போட்டியிடும் திமுக, காங்கிரஸ், சிபிஎம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார். பிரச்சாரங்களில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் தங்கராஜ், தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, ஆவுடையார்கோவில் ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகேஷ், நகரச் செயலாளர் கணேசன், வாலிபர், மாதர் சங்கத்தினர் பங்கேற்றனர்.