அறந்தாங்கி, ஜூலை 25 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா, கட்டுமாவடி கடைவீதியில் அமைந்திருக்கும் வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய ஆலய 6 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலையில் நடை பெற்ற இப்போட்டியில், பெரிய மாடுகளுக்கு எட்டு மைல் தூரமும், சின்ன மாடுகளுக்கு ஆறு மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டியுடன் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக் கும், மாடுகளுக்கும் பரிசு, சுழற்கோப்பை வழங்கப்பட்டது.