திருவாரூர், மார்ச் 13 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த முதுகலை பட்டதாரியான கவிதா பாண்டியன்(46) தேர்வு செய்யப்பட்டு பணியேற்ற நாளிலிருந்து இடைவிடாது பணியாற்றி வருகிறார். நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்ற இவரது தற்போதைய பணிகுறித்து கேட்டபோது அவர் கூறுகையில், “மக்களை நாடிச் சென்று அவர்களுக்கான பணியில் ஈடுபடும்போது அவர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் வரவேற்பும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே கிடைத்த இந்த பொறுப்பை சரியாக பயன்படுத்தி திட்டங்களை தீட்டி, சின்னஞ்சிறு நகரத்தை அழகிய - சிறந்த கட்டமைப்புகளைக் கொண்ட நகரமாக மாற்ற வேண்டும். மக்களுக்கு இன்னல் இல்லாத வாழ்க்கையை அளிக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருகிறேன். தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சிறப்பாக வெற்றி பெற்றதால் நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்ற, 10 நாட்களில் தமிழக முதலமைச்சரின் ஒத்துழைப்போடு நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவையான நிதியை பெற்று 5 ஆண்டிற்குள் திருத்துறைப்பூண்டி நகரத்தை அடிப்படை கட்டமைப்புகளோடு அழகாக மாற்றியமைக்கவும், நெரிசல் இல்லாத நகரமாக உருவாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. தற்போது நகர்ப்புற கலைஞர் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் நீர்நிலைகள்,
வாய்க்கால்கள் போன்றவற்றை தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது. கடந்த 7.3.2022 அன்று 24 ஆவது வார்டு சிங்களாந்தி கிராமத்தில் மக்களின் பங்கேற்புடன் இந்த பணி தொடங்கி வைக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து, எங்களின் பணிகளுக்கு ஊக்கமளித்து நிதி ஒதுக்கி தந்து பெறும் உதவியாக உள்ளார். ரூ.22 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைப்பதற்கு அரசிடம் அனுமதி பெற்று தந்துள்ளார். மேலும் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருக்குளம், வெட்டுகுளம் ஆகியவை தூர்வாரப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் மாற்றி புதிதாக கட்டித் தருவதற்கும், தற்போதைய பழுதடைந்த காய்கறி மார்கெட் கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ.3 கோடி மதிப்பில் நகராட்சியின் சார்பில் வணிக வளாகம் கட்டுவதற்கும் டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.50 கோடி நிதி உதவி பெற்று வடிகால்களை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மேலும் நகரம் முழுவதும் குறிப்பாக ஆலயப் பகுதிகளில் தூய்மைப் பணிக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் தமிழக அரசின் தாட்கோ தலைவர் முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் ஆதிதிராவிட நலத்துறையின் மாணவர் விடுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அவரது துறை மூலமாக அனைத்து வாய்ப்புகளையும் பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார். இப்பணிகளை திருத்துறைப்பூண்டி மக்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளின் துணையோடு சிறப்பாக நிறைவேற்றுவேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.
- எஸ்.நவமணி