பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
தஞ்சாவூர், ஜூலை 19 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆதனூர் புனித அன்னாள் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பள்ளியின் தாளாளர் ஆரோக்கியசாமி துரை தலைமை வகித்தார். கர்ம வீரர் காமராஜரின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய பின் கூட்டம் தொடங்கியது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில், கதை, நாடகம், பாடல்கள் ஆகியவை நடைபெற்றன. புதிய பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக, சிபிஎம் கிளைச் செயலாளர் பேரா.முனைவர் வேத கரம்சந்த் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வேலைகளிலும், பெற்றோர் ஆசிரியர் கழகம் துணை நிற்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
அரசுக் கல்லூரியில் தமிழ்நாடு நாள் விழா
தஞ்சாவூர், ஜூலை 19 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு திருநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராஜன் தலைமை வகித்தார். முனைவர் நா.பழனிவேலு வரவேற்றார். பட்டிமன்ற, வழக்காடு மன்ற பேச்சாளரும், சொற்பொழிவாளருமான திருவாரூர் கோமல் தமிழமுதன் சிறப்புரையாற்றினார். முனைவர் உமா தொகுத்து வழங்கினார். முனைவர் சி.ராணி நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு மாநிலம் அமைந்ததற்கான போராட்டங்கள் குறித்தும், மொழிவாரி மாநிலங்கள் அமைந்தது குறித்தும், சட்ட மன்றத்தில் தமிழ்நாடு அமைக்கப்பட்டதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறித்த ஒளிப்பட காட்சிகள் திரையிடப்பட்டன.
ஆட்டோ ஓட்டுநர்கள் தர்ணா
அரியலூர், ஜூலை 19 - அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஏரிக்கரையில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலை யில் ஆக்கிரமிப்பு என்று கூறி ஆட்டோ நிலையத்தை அப்புறப்படுத்தி விட்டு சிறு கடைகள் அமைக்க ஊராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள் ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் ஆட்டோவுடன் ஒன்றிய அலுவலக வாசலில் ஆட்டோக்களை நிறுத்திவிட்டு, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளத்தில் சேதமான செங்கற்கள்
அரியலூர், ஜூலை 19 - அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் உள்ள தென்கச்சி, பெருமாள்நத்தம், மேலகுடிக்காடு, அன்னகாரன்பேட்டை, கோடாலி கருப்பூர், அடிக்காமலை உள்ளிட்ட சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செங்கல் சூளைகள் போடப்பட்டுள்ளன. மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால், கொள்ளிடம் ஆற்றில் அதிக நீர்வரத்து உள்ளது. இதனால் ஆற்றின் கரை ஓரத்தில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கரை ஓரம் உள்ள பகுதிகளில், பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்ட செங்கல்களை போட்டுள்ளனர். இதில் அனைத்து செங்கல்களும் வெள்ளத்தில் சிக்கின. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் உரிமையாளர்கள் கவலை யில் உள்ளனர்.
தவறான முகவரிக்கு அனுப்பப்பட்ட தபால்
அரியலூர், ஜூலை 19 - அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிர மணியம் என்பவர் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத் திற்கு அனுப்பிய பதிவு தபால், தவறுதலாக தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாற்றி பதிந்து அனுப்பப்பட் டது. இதனால் பாதிக்கப்பட்டவர் அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ராம்ராஜ் “பாதிக்கப்பட்ட புகார்தாரருக்கு தபால்காரர் மற்றும் அஞ்சல் நிலைய அலுவலர், எழுத்தர் உள்ளிட்ட 3 பேரும் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குடவாசல், ஜூலை 19 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் திருவாருர் - குடவாசல் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக விபத்து நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் வர்த்தகர்கள் தானாக முன்வந்து அகற்றிய இடங்களை தவிர்த்து, மீதமுள்ள இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மீண்டும் ஆக்கிரமிப்புக்கு இடம் தராமல் உடனடியாக சாலை அமைக்கும் பணியினை தொடங்க வேண்டும். சாலை ஓரங்களில் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதை வழியும் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.