தஞ்சாவூர், மே 28 -
தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மனோரா கடற்கரையில், உலக கடற்பசு தினத்தையொட்டி, கடற்பசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:-
அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடற்பசு, கடல் வளத்தைப் பாதுகாக்கும் முக்கியமான உயிரினம். இப்பகுதியில் காணப்படும் இந்த அபூர்வ உயிரினத்தைக் காப்பாற்றும் வகையில் மனோரா பகுதியை தலைமை இடமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு ரூ.15 கோடி மதிப்பில் கடற் பசு பாதுகாப்பு மையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கடற்பசுவைக் காப்பாற்றி உயிருடன் கடலில் விட்ட மீனவர்களை பாராட்டுகிறேன். கடற்பசுவின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் அனைவரும் அதனை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
நிகழ்வில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனோரா கடற்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடற்பசுவைக் காப்பாற்றி கடலுக்குள் விட்ட மனோரா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சுப்பிரமணியன், சுரேந்திரன், சின்னமனை பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், அசோக்குமார் ஆகியோருக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.