எட்டு மணி நேர வேலை என்பதே உலகெங்கிலும் உள்ள பாட்டாளி மக்களின் முதல் கோரிக்கையாகும். 1886-ஆம் ஆண்டு மே முதல் நாள் “சட்டபூர்வமான வேலை நாள்” என்பது எட்டு மணி நேரம் தான் இருக்க வேண்டும் என்ற போர்ப் பிரகடனத்தை உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்கள் ஒன்றாக முழங்கினர்.
இதன் தொடர்ச்சியே இன்று உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளும் அந்தந்த நாடுகளில் ஏற்பட்ட தொழிலாளர்கள் எழுச்சியின் பின்னணியில் உருவாக்கப்பட்ட தொழிலாளர்நலச் சட்டங்களாகும்.
தொழிலாளி வர்க்கத்தின் பேரெழுச்சி 1917-ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் தொழிலாளி வர்க்க அரசை உருவாக்கியது. புரட்சியின் விளைவாக மாமேதை லெனின் தலைமையிலான சோவியத் அரசு மனித உரிமைகளை சட்டமாக்கியது. எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை உருவாக்கியது. அதன் பின்னணியில் தான் 1920-ஆம் ஆண்டு சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் தொழிலாளர்கள் உரிமை
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தொழில்துறையில் முதலாளி-தொழிலாளி உறவில் தலையிடாக் கொள்கையை 1919-ஆம் ஆண்டு வரை கடைப்பிடித்து வந்தது. அன்றிருந்த ஆலை முதலாளிகள் தொழிலாளர்களை தங்கு தடையின்றி சுரண்டினார்கள். நமது நாடு பெரும்பாலும் விவசாயம் சார்ந்திருந்ததால் நிலப்பிரபுத்துவ அமைப்பு முறைக்கும் இது உகந்ததாக இருந்தது. முதல் உலகப்போர் முடிவும், சோவியத் புரட்சிக்குப் பின் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. தொடர்ந்து தொழிலாளர்கள் உரிமைகளுக்கான போராட்டங்கள் நடைபெற்றன.
1920-ஆம் ஆண்டு ஏஐடியுசி அமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் முதன்முதலாக சர்வதேச தொழிலாளர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் சமூக பாதுகாப்புச் சட்டங்கள், ஊதிய வகை சட்டங்கள், தொழில் வாரி சட்டங்கள், வேலை நிலைச் சட்டங்கள், தொழில் உறவுச் சட்டங்கள், பொதுவான தொழிலாளர் சட்டங்கள் 44 வகையான தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதற்குக் காரணம் அனைத்து தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டம் தான். சமரசமற்று போராடிய தொழிலாளி வர்க்கத் தலைவர்களும் போராட்டக் களத்தில் உயிர்நீத்த தியாகிகளும் என்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டியவர்கள். அவர்கள் விட்டுச் சென்றுள்ள அடித்தளத்தில் தான் இன்றும் நாட்டில் நமது போராட்டங்கள் தொடர்கின்றன. நமது மூலவர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை இன்றைய ஆளும் ஒன்றிய பாஜக அரசு ஒவ்வொன்றாய் பறிக்க முயற்சிக்கிறது. பெற்ற உரிமைகளைப் பாதுகாக்கவும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவும் சமநீதி அரசை உருவாக்குவதற்கு தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடுவதே ஒரே வழி.
இதைத்தான் மாமேதை காரல் மார்க்ஸ் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை அடிமை சங்கிலியைத் தவிர; பெறுவதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது” என்றார். இந்த வைர வரிகளை நெஞ்சில் ஏற்றுவோம். நமது வர்க்க எதிரிகளை அடையாளம் கண்டு நிராகரிப்போம். இன்றைய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத-ஜனநாயக விரோதச் செயல்களை முறியடித்து முன்னேறுவோம்!
ஆர்.மனோகரன்
சிபிஐ(எம்) மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தஞ்சாவூர்