districts

img

கீரமங்கலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதி செய்து கொடுத்த இளைஞர்கள்

புதுக்கோட்டை,  பிப்.16 - கீரமங்கலம் அரசுப் பள்ளிக்கு இளைஞர்கள் வாகன வசதி செய்து கொடுத்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் ஊராட்சி ஒன்றிய தொடங்கப் பள்ளியில் 67 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் வளர்ச்சிக்காக அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து கணினி, கூடுதல் ஆசிரியைகள் என பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.  இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளில் பலர் சுமார் 2 கி.மீ  தொலைவிலிருந்து வந்து செல்கின்றனர். இந்த மாணவர்கள் வசதிக்காக வேன் வசதி செய்து கொடுக்க முன்னாள் மாணவர் சிற்றரசு வேன் வாங்கிய நிலையில், விபத்தில் ஒன்றில் அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அந்த வேனை சிற்றரசு நினைவாக, பள்ளி மாணவர்களின் வசதிக்காக இயக்க கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் இளைஞர்கள் திட்டமிட்டனர். சிற்றரசு வாங்கியிருந்த வேன் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல கொண்டு வரப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன் தலைமையில் இளைஞர் மன்றத்தினர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கான பள்ளி வேனை பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஏறிச் சென்றனர். இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், “தனியார் பள்ளியைவிட தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், பள்ளியின் தேவையறிந்து உதவிகளை செய்து வருகிறோம். சிற்றறரசு வாங்கிய வேனை அவரது நினைவாக பள்ளிக்கு இயக்குகிறோம். இளைஞர் மன்றத்தினரே ஓட்டுநர்களாக உள்ளனர். இளைஞர் மன்றம் மூலமே பெட்ரோல் செலவுகளும் செய்கிறோம். தொடர்ச்சியாக இந்த வேன் இயக்கப்படும்போது கூடுதல் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என நம்புகிறோம்” என்றனர்.