திருச்சிராப்பள்ளி, செப்.24 - மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு முதலீட்டில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்து தொழில் முனைவோராக விரும்புவோர் தனிநபர், சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியோரை தொழில் முனைவோராக உருவாக்க மானியம் வழங்கப்படும். கிராமப்புற கோழிகள் இன மேம்பாட்டிற்காக தொழில் முனைவோரை நிறுவுதல் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் 25 லட்சம் மானியம், வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் இனவிருத்திக்காக தொழில் முனைவோரை உருவாக்குதல் - 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் மானியம், பன்றி வளர்ப்பில் தொழில் முனைவோரை ஊக்குவித்தல் - 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் 30 லட்சம் மானியம். தீவன உற்பத்தியை பெருக்குதல் மற்றும் சேமிப்பு அலகு நிறுவுதல் - 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் 50 லட்சம் மானியம். இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய விருப்பமுள்ள பயனாளிகள் பொதுத்துறை வங்கிகள் மூலமாக மற்றும் சுயநிதி நிறுவனத்திடமிருந்து கடன் பெற்று திட்டத்தினை செயல்படுத்தலாம். இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ளோர் உரிய ஆவணங்கள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகளுடன் உதயமிமித்ரா போர்டலில் https://portal.udyamimitra.in பதிவேற்றம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.