districts

img

ஊதிய ஒப்பந்தத்தை பேசித் தீர்க்கக் வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, பிப்.14-  தமிழ்நாடு அரசு ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசித் தீர்க்க வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக்கழக மண்டல அலுலகம் முன்பாக  ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மண்டலப் பொதுச் செயலாளர் இரா.மணிமாறன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி பணியாளர் சங்க சம்மேளனப் பொதுச் செயலாளர் இராஜசேகர், ஏஐடியுசி சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் கணேசன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் நாராயணன், வின்செனட் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா உரையாற்றினார். முத்துக்குமார் நன்றி கூறினார். தமிழ்நாடு அரசு ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசித் தீர்க்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நியமனத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பப்பட்ன.