அரியலூர், மே 17- அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் வியாழக்கிழமை அன்று நிறைவடைந்தது. அரியலூர் மாவட்ட ஹாக்கி இந்தியா, டாக்டர் அப்துல்சாதிக் நினைவு ஹாக்கி கழகம், பசுபதி நினைவு ஹாக்கி கழகம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமில், 50 மாணவர்கள், 25 மாணவிகள் என 75 பேர் பயிற்சி எடுத்துக் கொண்டனர். மாவட்ட ஹாக்கி பயிற்சியாளர் ராஜ்குமார், பயிற்சியாளர்கள் மணிகண்டன், கவின் ஆசாத், ரஞ்சித் ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு ஹாக்கி பயிற்சி அளித்தனர். வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஏ.எஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அகமது ரபி, ஹாக்கி இந்திய மாவட்ட துணைச் செயலர் யோகநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் லெனின், எருத்துக்காரன்பட்டி ஊராட்சித் தலைவர் பரமசிவம் ஆகியோர், பயிற்சியில் பங்கேற்ற மாணவ,மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். முன்னதாக பசுபதி ஹாக்கி கழகச் செயலர் குணசேகரன் வரவேற்றார். துணைச் செயலர் மகேஷ்பாபு நன்றி தெரிவித்தார்.