தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டை மாநகரம் திருச்சிராப்பள்ளி, பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாகும். “ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவில்லா ஊக்கம் உடையான் உழை” என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, தளராத ஊக்கம் கொண்ட மக்களால் வளம் பெற்ற நகரம். மக்களும் மனமும் தமிழகத்தின் 7 கோடியே 21 லட்சம் மக்கள்தொகையில் சுமார் 27 லட்சம் மக்களைக் கொண்ட இந்நகரம், நாட்டின் அனைத்துத் திசைகளிலும் சொந்தங்களைக் கொண்டுள்ளது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், ஜைனர், சீக்கியர், பௌத்தர் என அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக வாழும் இந்நகரம், ஜாதிச் சண்டைகளற்ற கிராமம்-நகர் கலப்பு கொண்ட சிறப்பு மிக்கது.
விவசாயமும் வேலையின்மையும்
தமிழ்நாட்டின் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சம். இதில் திருச்சியில் மட்டும் 2.92 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். எனினும், இவர்களில் 70 சதவீதம் பேர் முழுநேர விவசாயிகளாக இல்லை என்பது கவலைக்குரியது. இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயமும், இயற்கை விவசாயம் செயற்கை விவசாயமாக மாறியதும் இதற்கு முக்கிய காரணங்கள். கல்வி நிலையங்களின் பெருமை தகுதிக்கு அறிவு முக்கியம், அறிவுக்கு கல்வி முக்கியம், கல்விக்கு கல்வி நிலையம் முக்கியம். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையங்கள் திருச்சியில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளாக உள்ளன. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பிஷப், ஜோசப், நேஷனல், ஹோலி கிராஸ் போன்ற கல்லூரிகள் செயல்பட்டு வந்துள்ளன. தற்போது:
6 பல்கலைக்கழகங்கள்
23 கலைக் கல்லூரிகள்
12 பொறியியல் கல்லூரிகள்
2 சட்டக் கல்லூரி
2 வேளாண் கல்லூரி
6 தொழிற்பயிற்சி கல்லூரிகள்
ஆகியவை செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் 38,000 மாணவர்கள் படித்து வெளியேறுகின்றனர்.
மரபு சார்ந்த தொழில்களில் படித்த இளைஞர்கள்
நெருக்கும் பொருளாதாரமும் அன்றாட தேவைகளும், படித்த இளைஞர்களை மரபு சார்ந்த தொழில்களில் ஈடுபட வைக்கின்றன. அழகு நிலையம், சமையல், டெலிவரி, சலவைத் தொழில், மால்கள், தியேட்டர், ஜவுளி கடை, மளிகை கடை, குடிநீர் ஆலை, கலர் ஃபேக்டரி, ஓட்டுனர், ஆலை உற்பத்தி, கைத்தறி, சிறுகுறு வியாபாரம் என பலவகையான தொழில்களில் படித்த இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. துப்புரவுப் பணிகளில் மட்டும் மாநகராட்சி பகுதிகளில் அனைத்து வகை நிறுவனங்களிலும் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை 70% ஆக உள்ளது. அரசு-தனியார் மருத்துவமனைகள், ஐடி நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை துப்புரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். இரும்பு மற்றும் இயந்திரப் பிரிவில் படித்த இளைஞர்கள் நவீன வளர்ச்சியில் மனிதர்களின் போக்குவரத்திற்கு அவசியமான வாகன இயந்திரங்கள், உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், சிறு-குறு வாகன பழுதுபார்ப்பு கடைகள், இரும்பு தொடர்பான கட்டுமானத் தொழில்கள், ஆலைத் தொழில்கள் ஆகியவற்றில் இளைஞர்கள் அதிகமாக பணிபுரிகின்றனர். ஆனால் அதற்கான தொழிற்கல்வி பெற்றவர்கள் மிகக் குறைவு. கிடைக்கும் வேலையை ஏற்றுக்கொள்ளும் நிலையே காணப்படுகிறது.
பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் நிலை
தமிழகத்தில் 2 கோடியே 51 லட்சத்து 77 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இதில்:
மத்திய அரசு பணியில்: 1.49 லட்சம் பேர்
மாநில அரசு பணிகளில்: 4.62 லட்சம் பேர்
மாநில பொதுத்துறை நிறுவனங்களில்: 2.48 லட்சம் பேர்
திருச்சியின் முக்கிய தொழில் நிறுவனங்களில்:
பொன்மலை ரயில் பெட்டித் தொழிற்சாலை: 6,000 பணியாளர்கள்
தென்னக ரயில்வே: 9,500 தொழிலாளர்கள் (தேவை 12,000)
துப்பாக்கி தொழிற்சாலைகள் (OFT & HAPP): 2,000 தொழிலாளர்கள்
அரசுப் போக்குவரத்து: 5,000 பணியாளர்கள்
மின்சார வாரியம்: 2,500 பணியாளர்கள்
ஐ.டி நிறுவனங்கள்: சுமார் 5,000 பணியாளர்கள்
உள்ளாட்சி அமைப்புகள்: 6,000 பணியாளர்கள்
இன்றைய பொருளாதார நிலையில் படித்த இளைஞர்கள்
தமிழகத்தில் அரசு நிறுவனங்களில் மட்டும் நான்கு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களுக்கு சுமார் 50 லட்சம் படித்த இளைஞர்கள் போட்டியிடுகின்றனர். “தாகத்திற்கு ஒரு டம்ளர் தண்ணீருக்கு மூன்று பேர் போட்டி போடலாம். ஆனால் இங்கு 300 பேர் போட்டி போட வைக்கின்றனர்.” நவீன தாராளமய, உலகளாவிய தனியார்மயக் கொள்கையும், நவீன தனியார் நிறுவன ஊக்குவிப்பும், அதன் சார்ந்த கார்ப்பரேட் அரசியலும் இன்றைய நிலையில் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசாங்கமும், துணை போகும் மாநில அரசாங்கமும் பொதுத்துறையை அழித்துக் கொண்டிருக்கின்றன. தனியார்மய அசுர வளர்ச்சியில் இட ஒதுக்கீடு இல்லை. படித்த இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தகுதிக்கேற்ற வேலைகளில் சேர்வதற்கு கடும் போட்டிகளை தனியார்மயம் கட்டவிழ்த்து விடுகிறது. இந்த நெருக்கடியான போட்டிகளால் ஊதியமும் குறைக்கப்படுகிறது. விலைவாசி உயர்வு காரணமாக அன்றாட வாழ்வை வாழ பணம் முக்கிய தேவையாகி உள்ளது. எனவே கிடைக்கும் வேலைக்குச் செல்லும் அவலமாக இளைஞர்கள் மாறி உள்ளனர். இப்படிப்பட்ட சூழல் தானாக உருவாகவில்லை. ஏகபோக முதலாளிகளின் நலனுக்காகவும், அதை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளின் திட்டமிடப்பட்ட செயல்தான் அனைத்திற்கும் காரணம். சமூகப் பாதுகாப்பான வேலை வேண்டும்! ஒவ்வொரு மனிதனும் இப்பூவுலகில் வாழ்வதற்காகவே பிறந்துள்ளனர். வாழ்வது என்பது உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்டவை தான். இந்த அடிப்படைத் தேவைகளை ஆடம்பரமாக்க முனைகிறது இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பு. அதன்
கோரப் பிடியில் இருந்து சமூகத்தையும், இளைய தலைமுறையையும் காக்க:
அரசு தனியார்மயத்தை ஒழித்து பொதுத்துறையை வளர்த்தெடுக்க வேண்டும் திருச்சியில் விவசாயம் சார்ந்த பூ, வாழை, தென்னை போன்ற மூலப்பொருட்களை கொண்ட தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் சிறு நகரங்களில் தொழில் வளர்ச்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும் முறைசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் நீர்க்குமிழிகள் எதிர்காலத்தை உருவாக்காது. வளமான எதிர்காலத்தை ஒருவர் மாறி ஒருவர் வருவதால் மாற்ற முடியாது. ஒன்று திரட்டப்பட்ட போராட்டக் களத்தில் வென்று காட்ட இளைஞர்கள் ஒன்றுபட்டால் முடியும்.