அறந்தாங்கி, ஆக.3 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஆவணத்தான்கோட்டை ஊராட்சி ஒன்றிய மேற்கு பள்ளியில், புதிதாக சேர்ந்த மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமணி கருணாநிதி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி வரவேற்றார். இந்த ஆண்டு பள்ளியில் புதிதாக சேரும் மழலையர் வகுப்பு (எல்கேஜி) மாணவர்களுக்கு வெள்ளி மோதிரம் பரிசளிப்பதாக பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த மழலையர் வகுப்பு மாணவர்கள் 6 பேருக்கு பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்களிப்போடு வெள்ளி மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. இனிமேல் புதிதாக சேரும் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கும் மோதிரம் பரிசாக வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர் ஸ்ரீபாஸ்கரன் நன்றி கூறினார்.