பெரம்பலூர், பிப்.1- பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பெரம்பலூர் நகராட்சி சார்பில் நடைபெற்ற நெகிழி கழிவு சேகரிப்பு இயக்க விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் தேசிய மாணவர் படை மாணவர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியானது நகரின் முக்கிய சாலை வழிகளில் சென்று துறையூர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் நிறைவடைந்தது. பேரணியில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தன்னார்வலர்கள் பங்கேற்று, நெகிழி பயன்படுத்துவதற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் தெப்பக்குளத்தில் தன்னார்வலர்கள் பொதுமக்கள் மற்றும் நகராட்சி தூய்மை பாரத இயக்க பணியாளர்கள் மூலமாக நெகிழி கழிவு சேகரித்து, சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக இப்பேரணி நிகழ்வில் கலந்துகொண்ட உணவக உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரிதிநிதிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் நெகிழிப்பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயபிரியா, உணவக உரிமையாளர்கள், வர்த்தக சங்கத்தினர், ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி தேசிய மாணவர் படை, ரோவர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், மற்றும் பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள், தூய்மை பாரத இயக்க பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.