பொன்னமராவதி, டிச.25 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளை தவிர மற்ற வாகனங்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொன்னமராவதி பேருந்து நிலையத்திற்குள் வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு கட்டணம் வசூல் செய்ய பேரூராட்சியால் உரிமம் பெற்ற ஒப்பந்தக்காரர்கள், சட்ட விரோதமாக உள்ளே வரும் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் சென்று வர முடியாத அளவிற்கு நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஏற்கனவே பொன்னமராவதி பேருந்து நிலையம் இடப் பற்றாக்குறையில் உள்ள நிலையில், சட்டவிரோதமாக காருக்கு கட்டணம் வசூலித்து கார்களை நிறுத்த அனுமதிப்பதால் கூடுதல் சிரமம் ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.