வாழ்வாதாரம் அளித்த ரயில்
கப்பல்கள் மூலம் தரங்கம்பாடிக்கு வரும் பொருட்களை இறக்குமதி செய்து, தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்ய (போக்கு வரத்து வசதிக்காக) 1926 இல் மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடிக்கு ரயில் சேவையை துவக்கியது ஆங்கிலேய அரசு. ஆனாலும், தரங்கம் பாடி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு சென்று, வரவும் பெரும் சேவையாற்றியது இந்த ரயில். மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன், மன்னம்பந்தல், செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், தில்லையாடி, பொறையார் வழியாக தரங்கம் பாடி வரை வந்த ரயிலின் இரு திசையிலும் உள்ள பகுதிகளில், அதிகமான கடைகள் உருவாகி ஏராளமானோருக்கு வாழ்வாதார அடையாளமாக இருந்துள்ளது இந்த ரயில்.
நேரத்தைச் சொன்ன ரயில் எப்போது வரும்?
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவரும், தரங்கம்பாடி ரயிலில் சென்று பயின்றவருமான டி.சிம்சன் கூறுகையில், “மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி வரை இருந்த ரயில் பாதையின் இருபுறமும் உள்ள நிலங்களில் விவசாயம் முப்போகமும் செழிப்பாக செய்யப்பட்டது. வயல்களில் விவசாயப் பணிகளில் ஈடுபட்ட கூலித் தொழிலாளர்களுக்கு அந்த ரயில்தான் நேரத்தை சொல்லியது. மாலை 5.30 மணிக்கு திருக்கடையூரை கடக்கும் போது ஒலி எழுப்பிக் கொண்டு வண்டி வரும்போது கை, கால்களை கழுவிவிட்டு தொழிலாளர்கள் கரை ஏறிவிடுவர். அதேநேரம் வண்டி சில நேரங்களில் தாமதமானாலோ, பழுதின் காரணமாக வரவில்லை என்றாலோ, பண்ணையார்கள் ‘மணியாகவில்லை’ என்று கூறி, கூலித் தொழிலாளர்களை இருட்டும் வரை வேலை வாங்கிவிடுவர். தங்களது உறவாகவே பார்த்து, அதில் பயணம் செய்து மகிழ்ந்த அந்த ரயில் எப்போது வரும் என காத்திருக்கிறோம். செம்பனார்கோவிலில் இயங்கிய வீகேசி டுடோரியல் சென்டருக்கு அதில் பயணம் சென்று பயின்ற அனுபவங்களை மறக்க முடியாது” என்றார்.
மயிலாடுதுறை, மன்னம்பந்தல், செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், தில்லையாடி, பொறை யார் வழியாக, தரங்கம்பாடி வரை ஒரு நாளைக்கு 4 முறை வந்து சென்றது அந்த ரயில். தங்களது நெருங்கிய உறவு களில் ஒன்றாகவே நினைத்து வாழ்ந்த அப்பகுதியினர், அந்த ரயில் குறித்து பேசினால் அளவுகடந்த மகிழ்ச்சிய டைகின்றனர். நாள்தோறும் காலை 7.30, 10.30, மதியம் 2.30, மாலை 5.30 என மயி லாடுதுறை ஜங்ஷனில் புறப்படும் ரயில் வண்டி தரங்கம்பாடி வரை வந்து சேவை ஆற்றியிருக்கிறது. அதேபோன்று காலை 8.30 மணி, 10.30 மணி, மதியம் 3.30 மணி, மாலை 6.30 மணி என தரங்கம்பாடி ரயில் நிலையத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி புறப்படும். இந்த ரயில் வெறும் பயணப் போக்கு வரத்துக்கு மட்டும் அல்லாமல், கடலோர மீனவ கிராமங்களுக்கு அன்றாடம் நல்ல குடிநீரை ஏற்றிச் சென்று, தாகம் தீர்த்த கொடையாளனாகவும் இயங்கி இருக்கிறது. 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் 3,111 ரூபாய்க்கு விலை பேசி, 1620-இல் டேனிஷ்காரர்களிடம் (டென் மார்க்) விற்கப்பட்ட தரங்கம்பாடி, உலகள வில் புகழ்பெற்ற வணிக மையமாக திகழ்ந்திருக்கிறது. தரங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதி களில் பெருமளவில் பயிரிடப்பட்ட பருத்தி களைக் கொண்டு, தரங்கம்பாடியிலேயே உற்பத்தி செய்யப்பட்ட உயர்தரமான ஆடைகள், அச்சிடப்பட்ட துண்டுகள், துணிகள், சால்வைகள், வாசனைப் பொருட்கள், உப்பு, தோல் பொருட்கள், சோப்பு போன்றவற்றை ஐரோப்பா மட்டுமின்றி சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள் ளனர்.
குறிப்பாக இந்திய சால்வைகள் டென் மார்க் நாட்டினரை வெகுவாக கவர்ந்த தால், அதிகளவில் அவற்றை ஏற்றுமதி செய்துள்ளனர். மேலும் தரங்கம்பாடி, பொறையார், தில்லையாடி, ஒழுகைமங்கலம், காத்தான் சாவடி, சாத்தங்குடி, அனந்தமங்கலம் என சுற்றுவட்டாரப் பகுதிகளில் பழத்தோட் டங்களை அமைத்து சாகுபடி செய்து, அதையும் சந்தைப்படுத்தி இருக்கின்ற னர். நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர் களை அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து, சந்தைகளுக்கு விற்பனை செய்வதற்காக மாட்டு வண்டிகளில் ஏற்றிச் சென்றுள்ளனர். அப்போது, தரங்கம்பாடி எல்லைப் பகுதிகளிலும், மாவட்ட எல்லைகளிலும் ‘டேனிஷ் ஆசி யாடிக்’ என்ற பெயரிலான கம்பெனி மூலம் டோல்கேட் அமைத்து வரி வசூல் செய்ததாக வரலாற்று பதிவுகள் கூறு கின்றன. மேலும், விவசாயிகளிடம் பல்வேறு வரிகளை விதித்து கொள்ளை லாபம் ஈட்டியிருக்கிறது அந்த கம்பெனி. தரங்கம்பாடி துறைமுகத்திற்கு வந்து சென்ற கப்பல்கள் வாயிலாக இறக்கு மதி, ஏற்றுமதி செய்து வளங்கொழித்த டேனிஷ்காரர்களும், அவர்களது வர்த்தக கம்பெனியும் ஆங்கிலேயர்கள் (பிரிட்டிஷ்) வருகை வலுவடைந்ததால் நிலை குலைய துவங்கினர்.
1845 இல் தரங்கம்பாடியை ரூ.12. 50 லட்சத்துக்கு ஆங்கிலேயர்கள் வலுக் கட்டாயமாக விலைக்கு வாங்கினர். பின்னர் ஆங்கிலேயர்களின் அடக்கு முறையால், இந்திய நெசவாளர்கள் நக ரத்தை விட்டு வெளியேறினர். தரங்கம் பாடியின் உலகளாவிய வர்த்தகம் வெகு வாய் குறைந்தது. 60 ஆண்டுகள் இடைவிடாது இயங் கிய ரயில் போக்குவரத்தை திடீரென நிறுத்தியது ரயில்வே துறை. இன்று வரும், நாளை வரும் என காத்திருந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத் தியும், கோரிக்கைகளை முன்வைத்தும் பயனில்லாமல் போனது. அகலப் பாதை யாக விரிவாக்கம் செய்யப் போவதாக பதில் கூறி 37 ஆண்டுகளாகி விட்டது. அக்காலக் கட்டத்தில் மன்னம்பந்த லில் இன்றும் செயல்படுகிற ஏவிசி கல்லூரி மட்டுமே இருந்த நிலையில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாண வர்கள் எளிதாக ரயில் மூலம் கல்லூரிக்கு வந்து சென்றனர். ஆனால் தற்போது செம்பனார்கோவில், திருக்கடையூர், பொறையார், தரங்கம்பாடி பகுதிகளில் கலைக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், நர்சிங் கல்லூரி, தொழிற் பயிற்சி பள்ளிகள் என 10-க்கும் மேற் பட்டவை இயங்கி வருகின்றன. வெளிப் பகுதிகளிலிருந்து எட்டு ஆயி ரத்துக்கும் அதிகமானோர் அக்கல்வி நிலையங்களுக்கு வந்து கல்வி பயிலும் சூழலில், மீண்டும் மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே ரயில் சேவையை துவக்கினால், மாணவர்களுக்கு மட்டு மல்ல; அனைத்து தரப்பினருக்கும் பய னாக அமையும். ரயில் போக்குவரத்தை மீண்டும் துவக்கிடக் கோரி நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவது குறித்து, மயிலாடு துறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம் கூறுகையில், “தொடர்ந்து தரங்கம்பாடி ரயில் குறித்து பேசியும், மனு அளித்தும் வருகிறேன். தரங்கம் பாடி ரயில் மட்டுமல்லாமல் மாப்படுகை யில் ரயில்வே மேம்பாலம், மயிலாடு துறை ஜங்ஷனில் ‘எக்ஸ்லேட்டர்’ வசதி என ஏராளமான கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகிறேன்” என்றார்.
சர்வே செய்து கிடப்பில் கிடக்கிறது
ரயில்வே குழு உறுப்பினராகவும், திருக்கடையூர் ஊராட்சி மன்றத் தலைவ ராகவும் பதவி வகித்த அமுர்த.விஜயக் குமார் கூறுகையில், “மக்களின் பல் வேறு போராட்டங்கள், கோரிக்கை களுக்கு பிறகு ரயில்வே வாரியம் திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்ய இன் ஜினியரிங் மற்றும் டிராபிக் பிரிவிற்கு உத்தரவிட்டது. இதையடுத்து திட்டத்தை ஆய்வு செய்து 2011 மே 11 அன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதன் பின்னும் மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் போக்குவரத்து குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. இந்த ரயில் போக்குவரத்தை மீண்டும் துவக்கி, அதை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருவதை ஒன்றிய அரசும், ரயில்வே துறையும் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
மீனவர்களை பாதுகாத்த தரங்கம்பாடி ரயில்
தரங்கம்பாடி, சந்திரபாடி, குட்டி யாண்டியூர் மற்றும் கடலோரக் கிராமங் களைச் சேர்ந்த மீனவ சமூக பெண்கள், கருவாடுகளை தரங்கம்பாடி ரயில் மூலம் மயிலாடுதுறை ஜங்ஷன் அருகில் அமைக்கப்பட்ட கருவாட்டு சந்தைக்கு ஏற்றி வந்து, ஞாயிறு தோறும் விற்பனை செய்வது வழக்கம். தற்போது தரங்கம் பாடிக்கு ரயில் போக்குவரத்து இல்லாத தால் வாடகை வாகனங்களில் ஆயிரக் கணக்கில் செலவு செய்து ஏற்றி வந்து, சொற்ப லாபத்தை மட்டும் பார்ப்பதாக கூறுகிறார் தரங்கம்பாடி சுனாமி குடி யிருப்பில் வசிக்கும் ராஜேஸ்வரி. “கடலோர கிராமங்களிலிருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும் மீன்கள், நண்டு, இறால் மற்றும் கருவாடுகளை சந்தைப்படுத்துவதற்கு ரயில் போக்கு வரத்து இருந்தால் வியாபாரம் எளிதாவ தோடு, மீனவர்களின் வாழ்வாதாரமும் உயரும். மேலும் காவிரியின் கடைமடை பகுதியான இப்பகுதியில் தப்பி பிழைத்து விளையும் நெல், நிலக்கடலை, காய்கறி கள், முந்திரி போன்றவற்றை சந்தைப் படுத்த பெரும் உதவியாக இருக்கும்” என்கிறார்
ஆக்கூர் ஊராட்சித் தலைவர் ஏ.ஆர்.சந்திரமோகன். மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவையை துவங்கிடக் கோரி டிசம்பர் முதல் வாரத்தில் “சைக்கிள் பிரச்சாரம்” செய்து, பொதுமக்களை சந்திக்கும் இயக்கத்தை நடத்தவுள்ளதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஏ.அறிவழகன், மாவட்டத் தலைவர் ஐயப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே திருக்கடையூர் அம்ம னாற்றின் குறுக்கிலும், தில்லையாடி மகிமலை ஆற்றின் குறுக்கிலும் இன்றும் கம்பீரமாக உள்ள இரும்பிலான ரயில் பாதை, செம்பனார்கோவில் பகுதியில் உள்ள சிக்னல் கம்பங்கள், ஊரின் பெயர் பொறித்த பலகைகளை வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவே லன் கூறுகையில், “வரலாற்றுச் சின் னங்கள் நிறைந்த தரங்கம்பாடிக்கு மீண்டும் ரயில் சேவையை துவக்கினால், சுற்றுலா வருபவர்களுக்கு, பயணத்தை எளிதாக்குவதோடு சுற்றுலாவும் வளர்ச்சிப் பெறும். இதனால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில், வாலிபர் சங்கம் சார்பில் நடத்தவுள்ள மாபெரும் இயக்கம் மூலம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென ஒன்றிய அரசிடமும், ரயில்வே துறையிடமும் வலியுறுத்துவோம்” என்றார். பொதுமக்களின் நியாயமான இக் கோரிக்கையை ஒன்றிய அரசும், இந்திய ரயில்வே துறையும் ஏற்றுக் கொள்ளுமா?
- செ.ஜான்சன், தரங்கம்பாடி