districts

img

மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை: ஆவணங்களை ஒப்படைக்க வந்த மக்கள்

திருவாரூர், ஜூலை 23- திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தாலுக்காவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் தாட்கோ, மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கி கடன் கிடைக்க பலமுறை துறை சார்ந்த அலுவலர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதிலும் நடவடிக்கை எடுக்காமல், துறை சார்ந்த அலுவலர்கள் பொருந்தாத காரணங்களை கூறி மனுதாரர்களின் மனுக்களை நிராகரித்தனர்.  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பொதுமக்கள் செவ்வாயன்று, தங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட தமிழ்நாடு அரசினால் பெற்ற அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்துவிட்டு, நாங்கள் நாடோடியாக வாழ்ந்து விடுகிறோம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் ஆவணங்களை ஒப்படைக்க சென்றனர்.  மாவட்ட ஆட்சியர் இதுகுறித்த விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு, விரைவாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.