திருவாரூர்,ஜூலை 8- திருவாரூர் மாவட்டம்,குடவாசல் ஒன்றியத்தில் உள்ள 18 புதுக்குடி கிராமத்தில் 2016-2018 ஆம் ஆண்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக திறக்க வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. 18 புதுக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி தெருவில் அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து 2016- 2018 ஆம் ஆண்டு நிதியில் அதே பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.கட்டி முடித்து பல ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனை சுட்டிக்காட்டி 18 புதுக்குடி ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தில் மனு அளித்தும் இது நாள் வரை அங்கன்வாடி மையம் திறக்கவில்லை. பழைய ஓட்டு வீட்டில் இடவசதி இல்லாமல் 47 குழந்தைகள் இறுக்கமான சூழ்நிலையில் உள்ளனர். உடனடியாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று சிபிஎம் குடவாசல் ஒன்றியச் செயலாளர் எம்.கோபிநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா கூறுகையில், பல கட்ட போராட்டத்திற்கு பிறகு இந்த கல்வியாண்டு ஜுலை 10 ஆம் தேதி அங்கன்வாடி மையத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்துள்ளனர் என்று தெரிவித்தார்.