பட்டுக்கோட்டை, ஏப்.24-
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மன நோயாளிகளை மீட்டு, தஞ்சாவூர் மாவட்ட மனநல சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை சமூக ஆர்வலர் வ.விவே கானந்தம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘‘பட்டுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் கண்டியன் தெரு, கைகாட்டி, கரிக்காடு, காசாங்குளம் நான்கு கரைகள், அறந்தாங்கி முக்கம் மற்றும் முக்கியச் சாலைகளில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் சுற்றித் திரிகின்றனர்.
அதேபோல பட்டுக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் சாலைகள் மற்றும் பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப் பட்டவர்கள் இருக்கிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட மனநல மையம், தன்னார்வ அமைப்புகள் ஆகியவை ஒன்றி ணைந்து இவர்களை மீட்டெடுத்து தஞ்சாவூர் மாவட்ட மனநல மையத்தில் சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.