மயிலாடுதுறை, டிச.23- இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ் நாவல் எழுதிய ‘‘புதினங்களின் தந்தை’’ என போற்றப்படும், மயிலாடுதுறையில் வாழ்ந்து இந்தியாவின் முதல் தமிழர் நீதிபதியும், மயிலாடுதுறை நகரத்தின் முதல் நகர்மன்ற தலைவரும், கவிஞருமான மாயூரம் வேதநாயகப்பிள்ளை நினைவை போற்றும் விதமாக மயிலாடுதுறையில் நினைவரங்கம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான இடத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளியன்று நேரில் பார்வையிட்டார். முன்னதாக புதிய பேருந்து நிலையத்தையொட்டியுள்ள வரதாச்சாரியார் பூங்காவில், ‘‘பெண் சமூக சீர்திருத்தவாதி இராமாமிர்தம் அம்மையாரின் நினைவாக வெண்கல திருவுருவ சிலை அமைக்கப்படும் இடத்தில் நடைபெறும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து விரைவில் பழுதுபார்க்கும் பணி நடைபெறவுள்ள சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல், இயக்குநர் (செய்தி) சிவ.சு.சரவணன், மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.