districts

img

தஞ்சாவூர் பாஜகவில் அடிதடி மோதல் மகளிரணி மாவட்ட செயலாளரை குக்கர் மூடியால் தாக்கிய மகளிரணி தலைவி தலைமறைவு

தஞ்சாவூர், ஜன.18 –  தஞ்சாவூர் பா.ஜ.க தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளராக இருப்பவர் ஜெகதீஸ்வரி. தெற்கு மாவட்ட மகளிரணி தலைவி கவிதா. இருவருக்கும் கட்சி ரீதியாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.  இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி ஆறு பேரை அழைத்துக்கொண்டு, ஜெகதீஸ்வரியின் வீட்டுக்கு சென்ற கவிதா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, கவிதா, ஜெகதீஸ்வரியின் தலையில், அங்கிருந்த குக்கர் மூடியால் தாக்கியுள்ளார். இதில், ஜெகதீஸ்வருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டு, பத்து தையல் போடப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெகதீஸ்வரி மருத்துவக்கல்லுாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கவிதா உள்ளிட்ட ஐந்து பேர்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் கவிதாவை தேடி வருகின்றனர். படித்ததை சொல்லக் கூடாது என மிரட்டல்  இதுகுறித்து ஜெகதீஸ்வரி கூறுகையில், நான் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். படிக்காத கவிதா, நான் படித்ததை வெளியில் சொல்லக் கூடாது என அடிக்கடி சொல்வார். இதனால் என் மீது கவிதா காழ்ப்புணர்ச்சியில் இருந்து வந்தார். கட்சி நிகழ்ச்சிகளில் என்னை மேடையில் உட்காருவதற்கு அனுமதிக்க மாட்டார். நிகழ்ச்சிகளில் என்னை கலந்துகொள்ளக் கூடாது என்பார். இது தான் என்னை தாக்க காரணம். கவிதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் புகார் அளித்துள்ளேன்.  கடந்த 14 ஆம் தேதியில் இருந்து கவிதாவை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். கட்சியினர் சிலர் கவிதாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்”  என்று  தெரிவித்தார். இந்நிலையில், பா.ஜ.க-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ், கட்சிக்குக் களங்கும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கவிதாவை பொறுப்பிலிருந்து நீக்கம் செய்துள்ளார்.