திருச்சிராப்பள்ளி, ஜூன் 20 -
திருச்சி முசிறி முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் முசிறி சின்னகொடுந்துறை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (45) என்பவரிடம் 3 சதவீத வட்டிக்கு ரூ.2 லட்சம் கடனாக பெற்றார். பின்னர் மாதந்தோறும் ரூ.6000 செலுத்தி யுள்ளார்.
பின்னர் கடந்த ஏப்ரல் 12 அன்று கடன் தொகை ரூ.2 லட்சத்தையும் திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ராஜேஷ் குமார் தனது மனைவி சசிகலாவுடன் வீட்டில் இருந்த போது, வட்டிக்காரர் ராஜேந்திரன், அவரது நண்பர் பன்னீர் செல்வத்துடன் வந்துள்ளார். மேலும் ரூ.4 லட்சத்திற்கு திருப்பி வட்டி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ் குமார் மறுப்பு தெரிவித்தார். அப்போது ராஜேந்திரனும் பன்னீர் செல்வமும் கணவன்-மனைவி இருவரையும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சசிகலா முசிறி காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், ராஜேந்திரன், பன்னீர்செல்வம் ஆகிய இருவர் மீதும் போலீசார் கந்து வட்டி தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.