பொன்னமராவதி், பிப்.9- பொன்னமராவதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் விஜயராஜன், சாத்தப்பன், அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியச் செயலாளர் நல்லதம்பி, ஒன்றியச் செயலாளர் சரவணன், ஒன்றியப் பொறுப்பாளர் பாஸ்கரன் விளக்கவுரையாற்றினர். மாவட்டச் செயலாளர் மகாதீர், மாவட்டத் தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் பங்கேற்று, சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற வேண்டும். பொன்னமராவதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு தொழில் பேட்டை அமைக்க வேண்டும். பொன்னமராவதி நகரத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் செப்பனிட்டு தர வேண்டும். பொன்னமராவதியில் கட்டப்பட்டுள்ள வாரச் சந்தையை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்பக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.