பாபநாசம், ஜூன் 24 - அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி சங்க 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் நடந்த விழாவில், தலைவராக ரவிச்சந்திரன், செயலராக முத்துக்குமரன், பொருளாளராக கோபால் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆளுநர் (தேர்வு) வைத்தியநாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்து பேசினார். துணை ஆளுநர் அறிவழகன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்துப் பேசினார். இதில் முன்னாள் தலைவர் சுப்ரமணியன், செயலர் முகமது ரஹ்மத்துல்லா, பொருளாளர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பணப் பரிசு, பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு பாம்பு பிடிக்கும் கருவி, மாணவிக்கு கல்வி உதவித்தொகை, வலங்கைமான் அறம் அறக்கட்டளைக்கு மைக் செட், திருச்சேறை சுடர் மாற்றுத் திறனாளி பள்ளிக்கு அரிசி மூட்டை, துணிகள், பூதலூர் வள்ளலார் ஆசிரமத்திற்கு ஒரு வேளை உணவிற்கான உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.