districts

img

விவசாய நிலத்தை மீட்டுத் தர வேண்டும் சிபிஎம் தலைமையில் விவசாயிகள் குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.15 - திருச்சி மாவட்டம் கிழக்கு பஞ்சப்பூர் கிராமத்தில் சர்வே எண்.303இல் 8 ஏக்கர் 63  செண்டு தரிசு நிலம் உள்ளது. இதில் ஏழை, எளிய பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 10 குடும்பத்தினர் கடந்த 71 வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு,  சில சாதி ஆதிக்க சக்தியினர் இந்த நிலங்களை  விற்க முயன்றனர். இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த போராட்டத்தையொட்டி திருச்சி வரு வாய் கோட்டாட்சியர், கிழக்கு வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்த போது, நீதிமன்றத்தை நாட வலி யுறுத்தப்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் திங்கட்கிழமை (அக்.14) ஒரு சிலர் இந்த  நிலத்தை அபகரிக்கும் நோக்கில், இந்நிலத்தில்  விவசாயம் செய்ய முற்பட்டனர். அதை, அங்கு ஏற்கனவே விவசாயம் செய்து வந்த பட்டியலின மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் விவசாயிகள், சம்பந்தப்பட்ட நிலத்திற்கு முன்பு நின்று செவ்வாயன்று குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதி  செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.  போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மனு  ரசீது வழங்கினர். மேலும் உரிய நீதிமன்ற  உத்தரவு இல்லாமல் மேற்படி நிலத்தில் இறங்குவது சட்டப்படி குற்றம் என எதிர்  தரப்பினருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.