தஞ்சாவூர், செப்.19 - தஞ்சாவூர் மாவட்ட ஆறுகளில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் முழு கொள்ளளவும், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் பகுதியாகவும் செல்கின்றது. பொதுமக்கள் யாரும் ஆழமான நீர்நிலைப்பகுதிகளில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம். ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள இடங்களிலும், அபாயகரமான இடங்களிலும் தன்படம் (Selfie) எடுப்பதையும் இரவு நேரங்களில் ஆற்றில் இறங்குவதையும் தவிர்த்திட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் ஆற்றில் ஆழமான பகுதியில் இறங்கி குளிக்கச் செல்லக்கூடாது. சில நேரங்களில் ஆறுகளில் சுழல் ஏற்பட்டு அதில் மாட்டிக்கொள்ள நேரிடும். வெளியூரிலிருந்து வரும் நபர்கள் ஆற்றில் குளிக்கச் செல்லும்போது உள்ளூர் பொதுமக்கள் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். குழந்தைகளை நீர்நிலைகளுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். கால்நடைகளை ஆழமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லாமல் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். ஆற்றின் கரைப் பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆற்றில் இறங்குவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.