கரூர், நவ.4- அமலாக்கப் பிரிவின் தொடர் நெருக்கடி காரணமாக, கரூர் மாவட்டத்தில் மாட்டு வண்டிகளில்கூட மணல் அள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. இதனை நம்பி தொழில் செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் கால்நடைகள் பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு நியாயம் கேட்டும், உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும். மாட்டு வண்டிகளில் மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கரூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் நவ.4 முதல் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, சனிக்கிழமை காலை போராட்டத்தை துவக்கினர். கரூர் மாநகர காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் பேசிக் கொண்டிருந்த போது, பேச்சை இடைமறித்து மைக்கை பறிமுதல் செய்தனர். தலைவர்களை கைது செய்தனர். கரூர் காவல்துறையின் ஜனநாயகத்திற்கு எதிரான இந்த அடக்குமுறையை சிஐடியு மாவட்டக் குழு கண்டிப்பதோடு, கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் ப.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.