districts

திருச்சி முக்கிய செய்திகள்

அய்யம்பேட்டை அரசுப் பள்ளியில் நூற்றாண்டு விழா

பாபநாசம், பிப்.8-  அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.   பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவநீதம் முன்னிலை வகித்தார். முன்னதாக தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் வளர்மதி ஆண்டறிக்கை வாசித்தார். இதில் கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தர், மாவட்டத் துணைச் செயலர் அய்யாராசு, அய்யம்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் புனிதவதி பள்ளி மேலாண்மை குழுத் தலைவி சரிதா, வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ், ஓய்வுபெற்ற நீதிபதி நவமூர்த்தி, அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் சுப்பராமன், அய்யம்பேட்டை மின்வாரிய உதவி பொறியாளர் கேசவன் உட்பட பலர் பேசினர். இதில்  விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, 100 சதவீத தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்களுக்கு பரிசு, இலக்கிய மன்ற விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, 10, 11, 12 ஆம் வகுப்பு  தேர்வுகளில் கடந்த ஆண்டில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு, அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பரிசு, கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் சின்ன ராஜா நன்றி கூறினார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை  அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாடு

திருச்சிராப்பள்ளி, பிப்,8-  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க 8 ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை அன்று திருச்சியில் நடந்தது.  மாநாட்டிற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஜான்பால் வரவேற்றார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வாசித்தார். நிதிநிலை அறிக்கையை மாவட்ட பொருளாளர் அருள் சமர்ப்பித்தார். திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் கங்கா தாரிணி, திருச்சி மாவட்ட மேலாண்மை அலகு இணை இயக்குனர் சுரேஷ் ஆகியோர் சிறப்புரை வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில், பல்வேறு துறைகளில் நேரடி பணி நியமனத்தை தவிர்த்து பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதை உடனடியாக கைவிட வேண்டும். பிற துறை பணிகளை நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய ஊழியர் கட்டமைப்பு ஏதும் இல்லாமல் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ள ஆணையிடுவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க மாநிலச் செயலாளர் ராஜசேகரன் நிறைவுறையாற்றினார். முடிவில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் வேலாயுதம் நன்றி கூறினார்.

கார் மோதி பெண் பலி

பாபநாசம், பிப்.8-  கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் கர்ணன் மனைவி செல்வராணி(45). இவர் வியாழன் இரவு இருச்கர வாகனத்தில் தஞ்சாவூரில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த ஒரு கார், செல்வராணி இருச்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராணி பலியானார். இது குறித்த புகாரின் பேரில், அய்யம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.