மயிலாடுதுறை, மார்ச் 26 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா 25 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிறன்று (மார்ச் 27) நடைபெறுகிறது. குடமுழுக்கை காண வரும் பக்தர்களுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகவும், அபிராமிபட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய அபிராமி அம்பாள் திருவிளையாடல் புரிந்த சிறப்பு பெற்ற தலமாகும். மேலும் 5 கோபுரங்கள் கொண்ட கோவிலின் குடமுழுக்கு மார்ச் 27 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கில், தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். குடமுழுக்கில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட சுகாதார வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி தயார் நிலையில் உள்ளனர். மேலும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாலை நேரங்களில் பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.