அரியலூர், ஜூலை 21 -
உலக சதுரங்க தினத்தையொட்டி, அரியலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களில் வியாழனன்று நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியை அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தொடக்கி வைத்து தலைமை உரையாற்றினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் கூறுகையில், “சதுரங்கப் போட்டி 1500 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடப்பட்டு வருகிறது. மற்ற விளையாட்டை காட்டிலும் இந்த விளையாட்டு, மாணவர்களின் கற்றலோடு நெருங்கிய தொடர்புடையது. இந்த விளையாட்டை விளையாடுவதால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கிறது.
தங்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் எளிய வழியில் தீர்வு காண உதவுகிறது. மாணவர்களின் படைப்பாற்றலை அதிகரிக்கிறது. மூளையின் செயல்திறனை பட்டை தீட்டும் விளையாட்டாக உள்ளது” என்றார்.
பின்னர் சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் அரியலூர் மாவட்ட சதுரங்க கழகச் செயலர் பிரவீன் பங்கேற்று, சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். முன்னதாக கல்வி நிலையச் செயலர் கொ.வி.புகழேந்தி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் நன்றி கூறினார்.
இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உலக சதுரங்க தினம் கொண்டாடப்பட்டது.