நாகப்பட்டினம், செப்.20 - நாகப்பட்டினம் நகரத்தின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் அக்கரை குளம் சீரமைக்கப்படுமா என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாகப்பட்டினம் நகராட்சியின் 33-வது வார்டில் அமைந்துள்ளது அக்கரை குளம். நகரத்திலேயே, அளவில் பெரியது, முதன்மையானது இக்குளம். இக்குளத்தை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். ஏழை-எளிய, உழைக்கும் மக்கள், தங்களுடைய குடிசை வீடுகளில் குளியலறை இல்லாத மக்கள் என அனைவரும் இக்குளத்தை நம்பியே இருக்கின்றனர். குளத்தில் நீர் வற்றுவதே இல்லை. மழை நீரால் குளம் நிரம்புவது மட்டுமல்லாது, கல்லணையில் திறந்து விடப்படும் விவசாய பாசன நீரானது விவசாயத்திற்கு பயன்பட்டது போக, இக்குளத்திலும் தேக்கப்படும். நகரத்தில் வசிக்கும் மக்கள் வார விடுமுறை தினங்களில் அக்குளத்தில் சென்று நீராடி மகிழ்வர். சுப நிகழ்வு, துக்க நிகழ்வு என அனைத்து நிகழ்வுக்கும் வருகிற மக்கள் அக்கரைகுளம் சென்று நீராடி மகிழ்வது நாகை நகரத்தின் சிறப்பு. நாகை மாவட்டத்தின் சுற்றுலா பகுதி மற்றும் புனித தலங்களான நாகூர், சிக்கல், வேளாங்கண்ணி போன்ற தலங்களுக்கு வரும் பயணிகள் இக்குளத்தில் குளித்துச் செல்வர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நீச்சல் சொல்லித் தருவதில் இக்குளம் பெரும்பங்கு வகிக்கிறது. குளத்தின் சுற்றளவு சற்று ஏறக்குறைய 2 கி.மீட்டர் இருக்கும். குளத்தை சுற்றிலும் பலமான கரைகள் அமைத்து, குளத்தை பாதுகாத்து வருகின்றனர். இக்குளத்தின் நலன் கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குளக்கரை முழுவதும் சறுக்கல் வடிவிலான கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டன. மழை பெய்தால் கரைப்பகுதி உடைந்து விடாமல் இருக்க இச்சுவர்கள் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி செல்வதற்காகவும், குளத்தின் அழகை ரசிப்பதற்காகவும் குளத்தைச் சுற்றிலும் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையின் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் துருப்பிடிக்காத எஃகுகளினால் ஆன பைப் கொண்டு கைப்பிடி வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று கோடி ரூபாய் செலவழித்து இப்பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது குளக்கரையின் நான்கு புறங்களிலும் கருவேல மரங்கள் வளர்ந்து பக்கவாட்டுச் சுவர்களையும் நடைபாதை மேடைகளையும் முற்றிலுமாக மறைத்து விட்டன. எருக்கஞ்செடிகள், புல் பூண்டுகள் வளர்ந்து புதர்காடுகள் மண்டியுள்ளன. நடைப்பயிற்சி செல்வதற்கு தகுதியற்ற பகுதியாக இது காணப்படுகிறது. பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிக்கும் குளத்தின் நீரானது, தற்போது பச்சை நிறத்தில் இருக்கிறது. நீரின் தன்மையும் மாறி ஒருவித துர்நாற்றம் மேலிடுகிறது. குளத்தின் வடிகால் பகுதி மணல் திட்டுகளால் மேடிட்டு முற்றிலுமாக தூர்ந்து விட்டது. குளத்தின் நீரை வடிய வைத்து,
புதிய நீரை குளத்திற்குள் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. பல மாதங்களாக பயன்படுத்தப்பட்ட நீர், வடிகால் வழியாக வேதாரண்யம் கால்வாய் பகுதிக்கு திருப்பி விடப்பட்டு கடலுக்குள் கலக்கும் வாய்க்காலும் பராமரிப்பின்றி கிடக்கிறது. மிகப்பெரிய பொருட்செலவில் அமைக்கப்பட்ட நடைபாதையானது ஆங்காங்கே பெயர்ந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை துவங்கும் முன்னரே இக்குளத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட நீரை வெளியேற்றிவிட்டு மழை நீரையும், ஆற்று நீரையும் தேக்கி வைக்க ஏற்பாடு செய்யலாம். ஏழை-எளிய, உழைக்கும் மக்கள், தங்களின் நீராதாரமாக விளங்கும் அக்கரைகுளம் குறித்த தங்களது மனக்குமுறல்களை கொட்டித் தீர்க்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகரச் செயலாளர் க.வெங்கடேசன் குளத்தை சுற்றிலும் ஆய்வு மேற்கொண்ட பின் கூறுகையில், “இக்குளத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அம்மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்ததாக இக்குளம் விளங்குகிறது. குளத்தின் சுற்றுப் பகுதிகளில் கருவேலங்காடுகள் வளர்ந்து கிடக்கின்றன. கரைப்பகுதிகள் கால்நடை மற்றும் மனித கழிவுகளால் அசுத்தமாக காணப்படுகிறது. பெண்கள் குளிக்கும் படித்துறை பகுதிகளில், ஆறடி உயரத்திற்கு பெண்கள் உடை மாற்றுவதற்கான தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். நாகப்பட்டினம் நகராட்சி இக்குளத்தின் சுகாதாரத்தைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். (ந.நி)